Tuesday, February 27, 2007

ஒரு சிறு - நிர்வாகக் -கதை

எனது தந்தையார் பல வருடங்களுக்கு முன் சொன்ன இந்தக் கதையில் ஒரு நிர்வாக (Management) ரகசியம் புதைந்திருப்பதை அனுபவ பூர்வமாகக் கண்டு கொண்டவன் நான்.

முதலில் கதை.

ஒரு ஊரில் ஒரு பணக்கார வியாபாரி இருந்தான். புகைவண்டி, பேருந்துகள் இல்லாத காலம் அது. அவன் தனது குதிரை வண்டியிலே ஊரூராகப் பயணம் செய்து பலவிதமான பொருட்களை கொள்முதல் செய்தும் விற்பனை செய்தும் செல்வம் சேர்த்தான். வசதியான வியாபாரியானதால் அவனுக்கு சொந்தத்தில் வீடு, நிலபுலன்கள், உழவு எருதுகள், கறவைப் பசுக்கள் என்று இலக்குமி கடாட்சம் பொங்கியது. தான் ஊரில் இல்லாத நேரத்தில் திருட்டு பயத்தை எதிர்கொள்ள நாய் ஒன்றையும் வளர்த்தான். ஆனால் கதையின் நாயகன் வியாபாரி அல்ல. அவனது குதிரை. இப்போது வீட்டின் பின்கட்டில் நடைபெற்ற ஒரு உரையாடலைக் கேட்போம். நேரம் இரவு பத்து மணிக்கு மேல்.

(நமது கதாபாத்திரங்களுக்கு பெயர்கள் இருந்தால் வசதியாக இருக்குமே. குதிரையை வீரனென்றும் உடன் உரையாடும் எருதை காளியன் என்றும் வைத்துக் கொள்வோம்.)

வீரன் : சே ! என்ன மாதிரி புல்லைப் போட்டு போறானையா மனுஷன். காஞ்சு போயி தொண்டைக்குள்ளே எறங்க மாட்டேங்குது.

காளியன் : என்ன வேய் அலுத்துக்கிறீர். நாங்களும் காஞ்சு போன வைக்கோலை தின்னுப் புட்டுதான் வெய்யில்ல வேகுறோம். இது என்ன புதுசா ?

வீரன் : அட நீ வேற வயத்தெரிச்சல கொட்டிக்கணுமா ? உமக்கெல்லாம் வருசத்தில மூணு மாசம் இல்லெ நாலு மாசம் ஒரே மாதிரி வேலை. அதுவும் சாயங்காலம் ஆச்சுன்னா வீடுதான். எம்ம பொழப்பு அப்பிடியா ! வெய்யிலு மழெ, காடு மேடு எதுவானாலும் ஓட்டம் தான். ஓடு ஓடு ஓடிகிட்டே இரு. சரியா சாப்பிட்டு மூணு நா ஆச்சி. இப்பத்தான் உள்ள வரேன். போடற புல்லு அஞ்சு நா பழசு. ஒடம்பெல்லாம் ஒரே வலி. பொழப்பு நாயி பொழப்பா போச்சு.


காளியன் : நாயி பொழப்புன்னு சொல்லாதே. கரியனுக்கு கோவம் வரும்.....
(கரியன் என்பது வியாபாரியின் நாயிற்கு இவைகளாக வைத்த அடைப்பெயர். வியாபாரியோ அதை ராஜா என்றே கொஞ்சுவான்)

வீரன் : அவனெ ஏம்பா இங்கெ இழுக்கிறெ.

காளியன் : பின்னே என்ன ! கரியனுக்கு கெடைக்கிற ராச மரியாத யாருக்கு கெடைக்குது இந்த வூட்டுல. தினந்தினம் பாலும் பிஸ்கோத்து, வாரத்துல ரெண்டு நாள் கறி. வீட்டுக்குள்ள எங்க வேண்டுமானாலும் சுத்தலாம்.யாரு மடியில வேண்டுமானாலும் ஏறி கொஞ்சலாம் ஹும்...

வீரன் : ஹும் நீ சொல்றதும் சரிதான். எல்லா நாயும் கரியன் ஆக முடியாது தான்.


பின்கட்டு ஜீவன்களுக்கு கரியனைக் கண்டால் ஒரு பொறாமை, ஒரு எரிச்சல். அதற்கு இன்னொரு காரணமும் இருந்தது. கரியன் சும்மாவாவது பின்கட்டில் வந்து இந்த அற்ப ஜீவன்களிடம் தன் வெட்டி வீராப்பைக் காட்டிக் கொள்ளும். வைக்கற்புல் மேல் மதிய நேரங்களில் படுத்துக் கொள்வது, வைக்கற்புல்லைத் தின்ன வரும் ஜீவன்களை பார்த்து குரைப்பது, வீணிற்கு அவைகளின் கன்றுகளை விரட்டி பயமுறுத்துவது போன்ற பல நடவடிக்கைகள் இவைகளுக்கு அறவே பிடிக்கவில்லை.


வீட்டு முன் புறத்தில் வீதியில் போய் கொண்டிருந்த யாரையோ பார்த்து குலைக்கத் தொடங்கியது கரியன்.



காளியன் : இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்லை. என்னமோ இவனே எல்லாத்தையும் கட்டி காக்கறதா நெனப்பு. ரொம்ப கொழுப்பு ஏறி கெடக்கான். நாக்கத் தொங்கப் போட்டுகிட்டு இங்க வந்து மணிகணக்கா உக்காந்துக்க வேண்டியது. தனக்கும் வேண்டியதில்லை அடுத்தவனையும் திங்க விடறது இல்லை. ஒரு நாளைக்கு உதை வாங்கி சாகப் போறான்.

வீரனுக்கு இருந்த களைப்பில் பேச்சைத் தொடர மனமிருக்கவில்லை. ஆனால் அன்றைய உரையாடல் மனதில் ஆழப் பதிந்தது. தானும் முதலாளியின் அன்பைப் பெறுவதே தன் சங்கடங்களை தீர்த்துக்கொள்ள வழி என்று எண்ணியது.

அன்றிலிருந்து கரியனின் நடவடிக்கைகளை உற்று நோக்கத் தொடங்கியது வீரன். எசமான் வரும் வேளையில் வாசலிலேயே காத்துக்கிடப்பது, அவன் வந்த உடன் அவனைச் சுற்றி சுற்றி வருவது அவன் சற்று மகிழ்சியாக காணப்பட்டால் தன் முன்னிரு கால்களையும் தூக்கி அவன் இடுப்பில் வைத்து தன் அன்னியோன்னத்தை வளர்த்துக் கொள்வது அதன் பின் எசமானனுக்கும் முன்பாக வேகமாக வீட்டுக்குள் ஓடி அன்பான குரைத்தல் செய்து வரவேற்பது போன்ற பல யுக்திகளை கரியன் கையாள்வதைக் கண்டது.

இதையெல்லாம் அந்த வியாபாரியும் அவன் குடும்பமும் அங்கீகரிப்பது அவர்கள் படும் சந்தோஷத்திலிருந்து தெரிந்து கொண்டது வீரன்.
ஒருவேளை இதைத்தான் இவர்கள் விரும்புகிறார்களோ, நாம் இப்படி யெல்லாம் தான் நடந்து கொள்ளாததால் தான் தன்னை இரண்டாம் தரமாக நடத்துகிறார்களோ என்பது போன்ற எண்ணங்கள் தோன்ற துவங்கியது. நாளாக நாளாக அந்த எண்ணமே வலுவானது. கடைசியாக ஒரு நாள் தாங்க முடியாமல் தானும் கரியன் போலவே தன் அன்பை வெளிக்காட்டி விடுவது என்ற முடிவு செய்தது.

வியாபாரி ஏதோ முக்கியமான விஷயமாக வெளி கிளம்பும் நோக்கத்தோடு வீரனை கொட்டிலிலிருந்து அவிழ்த்து விட்டான். அவன் வண்டியைத் தயார் செய்வதற்குள் அவனை சுற்றி சுற்றி ஓடத் தொடங்கியது வீரன். வியாபாரிக்கு என்ன நடக்கிறது என்று புரியவில்லை. வீரனுக்கு ஏதாவது ஆகிவிட்டதா என்று கவலை ஏற்பட்டது. நடு நடுவே கனைக்கத் தொடங்கியது. வியாபாரி அதன் லாகானைப் பற்றி அதைக் கட்டுக்குள் கொண்டு வர முயல்கையில் அன்பின் மிகுதியால் தன் முன்னங்கால்களை வியாபாரியின் தோள்கள் மீது தூக்கி வைத்தது. அதன் எடை தாங்காமல் பொத்தென்று கீழே விழுந்தான் அவன். இப்போது வியாபாரிக்கு மரண பயம் வந்து விட்டது. போதாத குறைக்கு விழுந்த அவனை தனது நாக்கினால் நக்கி அன்பை வெளிக்காட்ட முயற்சித்தது வீரன். அதற்குள் அங்கு வந்த குடும்பத்தினர் வீரனுக்கு மதம் பிடித்து விட்டதென்று நையப் புடைத்து துரத்தி விட்டனர். "இரு இரு முதலில் இதை விற்று விட்டுதான் வேறு வேலை" என்று திட்டிக்கொண்டே வேட்டி சட்டை மாற்றிக் கொள்ள உள்ளே சென்றான் வியாபாரி.

உதை வாங்கிய வேகத்தில் சற்று தூரம் ஓடி நின்ற வீரனுக்கு ஒன்று மட்டும் புரியவில்லை. கரியன் செய்வதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் இம்மக்கள் தன்னை மட்டும் தண்டித்தது ஏன்?

இந்த கதைக்கான உட்கருத்தை விளக்கும் போது தன் இயல்புக்கு மாறாக இன்னொருவரை போல் ஒருவர் நடந்துக் கொள்ள முற்பட்டால் அவமானமே மிஞ்சும் என்று கூறியதாக ஞாபகம்.

சரி இதில் நிர்வாக நுணுக்கம் (Management principle) என்ன உள்ளது ?

முதலாளிகள் வியாபாரியைப் போன்றவர்.

தயாரிப்பு துறையில் (Production Dept) உள்ளவர்கள் காளியன்கள் போன்ற எருதுகள்

விற்பனைத் துறையில் (Sales, Marketing) உள்ளோர் வீரன் -கள் போன்ற குதிரைகள்.

கரியன்கள் யார் ? இன்னுமா புரியவில்லை - கணக்குத் துறை ( Accounts) அல்லது நிதித் துறை (Finanace)

கதையை மீண்டும் படிக்கவும இந்தப் புதிய கோணத்துடன்.

ஒவ்வொரு துறையினரின் பரிதவிப்புகளும் நியாயமே. ஆயினும் ஒரு துறையினர் மற்றத் துறையினரின் செயல்பாட்டோடு ஒப்பிட்டுக் கொண்டு பரிகாரம் தேட இயலாது. நான்கு அல்லது ஐந்து வருடங்களே ஆன Charted Accountant இருபது வருடங்களுக்கும் மேலாக அனுபவம் மிக்க தொழில் நுட்ப வல்லுனர்களை விட அதிக வருவாய் பெறுவது என்பது இன்றைய தொழில் உலகில் சர்வ சாதாரணம். காரணம் கரியனையும் காளியனையும் ஒப்பிட முடியாது என்பது தான்.

உங்கள் கருத்துகளையும் கூறுங்கள்.

3 comments:

Kavinaya said...

நிர்வாகத் துறைக்கு மட்டுமில்லை, பொதுவாகவே பொருந்தக் கூடிய அறிவுரைதான்! நாம் நாமாக இருப்பதே நல்லது.

கதை நன்று :)

வே.நடனசபாபதி said...

மேலாண்மை பற்றி எத்தனையோ செய்திகளை கதைகள் மூலம் கேள்விப்பட்டதுண்டு. இந்த கதை சொல்லும் செய்தி புதியது. வாழ்த்துக்கள்!

Anonymous said...

வணக்கம்
இன்று வலைச்சரத்தில் அறிமுகம்மானதற்கு எனது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-