Sunday, November 18, 2012

மலர்கள் ஏற்றிய மத்தாப்பு

இந்த வருஷம் கொஞ்சம் வித்தியாசமான தீபாவளி.

நாங்கள் வசிக்கும் ரிலயன்ஸ் கம்பெனியின் குடியிருப்பு பகுதிக்கு இரண்டு அல்லது மூன்று கி.மீ  தூரத்தில் பிரதான சாலையிலிருந்து விலகி  ஒரு கி.மீ  உட்புறமாக ஒரு கோவில் உண்டு. இறைவியின் பெயர் ஆஷாபுர தேவி. ஜாம்நகர் அரச குடும்பத்தாரால் ஒரு காலத்தில் வணங்கப்பட்டு வந்த தெய்வமாம். மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் என்று ரிலயன்ஸ் எஸ்ஸார் கம்பெனிகளை சேர்ந்த குடும்பங்கள் அடிக்கடி தரிசனத்திற்கு வருவதுண்டு.



இந்த ஆஷாபுரத்தை சுற்றி குடியிருப்பவர்கள் முக்கியமாக பால் வணிகம் செய்பவர்கள்.  எருமைகள் மெஜாரிட்டி, பசுக்கள் மைனாரிட்டி. எளிமையான மக்கள். சராசரிக்கும் குறைவான வாழ்க்கைத்தரம் என்றே சொல்லலாம். தீபாவளியன்று காலை சத்யசாயி சமிதி அன்பர் ஒருவர் தொலைப் பேசியில் ‘ஆஷாபுரத்து அருகே ஜோகாவாத் கிராமத்தில் தீபாவளி கொண்டாடலாம் வருகிறீர்களா’ என்று கேட்டார். சரியாக ஆறு மணிக்கு மாலை மெயின் கேட்டருகே வந்துவிடுங்கள் என்றார்.
மேடும் பள்ளமுமான சாலையில் ஏறி இறங்கி மின்சாரம் இல்லாத ஒரு கட்டி முடிக்கப்படாத ஒரு கட்டிட வளாகத்தை ஆறேகால் மணிக்குப் போய் சேர்ந்தோம். போய் இறங்கியது நான்கு குடும்பங்கள் , கார் டிக்கி நிறைய பட்டாசு, ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருந்த சுமார் முப்பது நாற்பது சிறுவர் சிறுமியர் இது தான் அங்கே நிலவிய காட்சி. அடுத்த ஒன்றரை மணி நேரம் அந்த குழந்தைகளின் உற்சாகமும் சந்தோஷமும் கொடுத்த மன நிறைவு வேறு எவ்வகையிலும் பெறமுடியாதது.
அதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள சில படங்கள் இங்கே;






கடைசியாக இனிப்பு தின்பண்டங்கள் வினியோகம். அனைத்துக் குழந்தைகளும் குஜராத்தி மொழியில் கல கலப்பாக பேசிக்கொண்டது மரங்களில் பறவைகள் பேசிக்கொள்வது போல் இருந்தது.

 உங்களுடைய இல்லங்களிலும் குழந்தைகளுடன் தீபாவளியை  மகிழ்ச்சியுடன் கழித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.

Sunday, May 27, 2012

நகையெனும் ஒரு யோகம்

Laughter is the best medicine என்கிற ஆங்கில வழக்கை அறிவோம்.  “இடுக்கண் வருங்கால் நகுக” என்று வள்ளுவர் சொல்வதும் பயிற்சியில்லாமல் கைவராது.  அது கைவரப் பெற்றால் அதுவே யோக நிலையாகும். சீனாவிலும் ஜப்பானிலும் பிரசித்தமான ”சிரிக்கும் புத்தன்”  குறிப்பிடும் நிலையாகும் அது.


அதை பயில்வதற்கு மக்குதிம்மன் சொல்லும் வழியையும் பார்ப்போம்.
 D.V.குண்டப்பாவின் கவிதையின் மூலம் -அல்லது நேரடி மொழி பெயர்ப்பு

அசமத்தில் சமமும், வித்தியாசங்களில் ஒற்றுமையும்
அசம்பந்தங்களில் சம்பந்தத்தையும் (அறிகின்ற) சூத்திர நயமே
விசனமயமான சம்சாரத்தில் விநோதங்களைக் கண்டு
ரசிக்கும் தன்மையே யோகமாகும் - மன்கு திம்மா

இதை நான் புரிந்த கொண்ட விதத்தைப் பகிர்ந்து கொள்கிறேன்

அசமத்தில் சமம் : ஒருமுறை ஐன்ஸ்டீன் ஒரு குழந்தைக்கு பாடம் சொல்லிக் கொடுக்க நேர்ந்ததாம். குழந்தை கொஞ்சம் பேச்சும் துடுக்குத்தனமும் நிறைந்தது போலும். அதன் தாயார் பின்னர் அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்ட போது “ அந்தக் குழந்தையிடம் நான் கற்றுக்கொண்டதும் நிறைய உண்டு” என்று பதிலளித்தாராம் ஐன்ஸ்டீன். வயதிலும் அறிவிலும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசம் அக்குழந்தைக்கும் அந்த விஞ்ஞானிக்கும். அது அசமம். ஆனால் கற்றுக்கொள்ள எவ்வளவோ விஷயங்கள் உலகத்தில் எல்லோருக்கும் எல்லாக் காலத்திலும் உண்டு என்பதை அவர் சுட்டிக்காட்டும் போது தம்மிருவருக்கும் இடையே ஒரு சமத்தை கண்டார். அதுவே அசமத்தில் சமம்.

வித்தியாசங்களில் ஒற்றுமை: புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டிருந்த மேனேஜிங் டைரக்டரிடம் மனித வளத்துறை அதிகாரி  கம்பெனிக்கு நியமிக்கப்பட இருந்த இளம் தொழில்நுட்ப வல்லுனர்களுக்கான தேர்வு முறைகளை விளக்கிக் கொண்டிருந்தார். முதல் கட்டமாக எழுத்து மூலமான பொதுத் தேர்வு. அடுத்த கட்டமாக ஆப்டிட்யூட் டெஸ்ட். மூன்றாம் நிலை க்ரூப் டிஸ்கஷன். கடைசியாக நேர்முகத் தேர்வு என்று ஒவ்வொரு படியையும் விவரித்தார்.  அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த மேனேஜிங் டைரக்டர் “சரிதான் அப்போ எனக்கு வேலை கிடைக்காது”  என்று  சொல்லவே யாவரும் சிரித்து விட்டனர். நிர்வாகப் பொறுப்புகள் மிகுந்த உயர்பதவியையும் ஆரம்பப் படித்தட்டு வேலையும் ஒன்றோடு ஒன்று ஒப்பிட முடியாதவை. ஆனால் அந்த அதிகாரி தான் மீண்டும் அந்த ஆரம்பத்தட்டு நிலையை சந்திக்க நேர்ந்தால் தன் நிலைமை என்ன என்று ஒப்பிட்டுக்கொள்ளும் மன ஒற்றுமையில் நகைச்சுவை எழுகிறது

அசமந்தங்களில் சம்பந்தம்: இராமன் விளைவு என்பது, ஒளி பல ஊடகங்கள் வழியே ஊடுருவி வெளிவரும் போது ஏற்படும் ஒளிப்பிரிகைகளால் தோன்றும் வர்ண மாற்றங்கள் பற்றியது. வானும் கடலும் நீலமாகத் தோன்றுவது இத்தகைய ஒளிப்பிரிகையால்தான் என்பதை பரிசோதனைகளால் நிரூபித்த சி.வி.ராமனுக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அப்போது பல பாராட்டு விழாக்களிலும் விருந்துகளிலும் கலந்து கொள்ள வேண்டியதாயிற்று. அப்படிப்பட்ட வெளிநாட்டு விருந்து ஒன்றில் மதுபானம் தொடர்ந்து பரிமாறப்பட்டது. தொடர்ந்து மறுத்து வந்தார் சி.வி. ராமன். சில வெளிநாட்டு அன்பர்கள் வற்புறுத்தவே அவர் சொன்னது  “ மதுவில் ராமன் விளைவைக் காணலாம். ஆனால் இராமனுள் மது விளைவை காண்பது உசிதமல்ல” 

விசனத்திலும் விநோதம் :  மகாபாரதத்தில் வரும் ஒரு கதை. வீட்டுக்கு ஒருவர் என்ற முறைப்படி பகாசுரனுக்கு உணவு கொண்டு செல்லும் முறைப்படி அன்று அந்த சிறுவனின் முறை. அவனை விட்டால் வேறு ஆண்பிள்ளைக் கிடையாது. உணவு கொண்டு செல்பவனையும் தின்று தீர்த்து விடுவது பகாசுரன் வழக்கமாதலால் அவனது தாய் பெரும் துக்கத்தில் மூழ்கினாள். அந்த பச்சிளம் பாலகன் ஒரு சிறிய குச்சியை கையில் வைத்துக் கொண்டு நீ கவலைப் படாதே அம்மா. பகாசுரனை நான் அடித்து கொன்று விடுவேன்” என்று வீரம் பேசும் போது தன் துக்கத்தையும் மறந்து சிரிக்கிறாள் அவனது தாய்.

எந்நிலையிலும்  நகைச்சுவை உணர்வை கைவிடாமல் இருந்தால் நமக்கும் பிறருக்கும் வாழ்க்கை ரசிக்கத்தக்கதாக மட்டுமல்ல மனதளவில் அது ஒரு உயர்ந்த பயிற்சியாகும் என்பதை  DVG குறிப்பிடுகிறார். உங்களுக்கு தெரிந்த மேலும் பொருத்தமான உதாரணங்களைச் சொன்னால் நம் ரசிப்புத் திறமையும் கூடுமே ! :))
என்னுடைய மொழியாக்க முயற்சி:

அசமத்தில் சமங்களையும் முரண்களில் ஒற்றுமையும்
அசம்பந்தத்தில் சம்பந்தம் தேடுவதும் நயமே.
விசன வாழ்வில் நகையுணர்வு கொள்ளுவதே
ரசனை யுள்ள யோகமடா -மக்குத்திம்மா

[மக்குதிம்மன் மேலுள்ள அன்பினாலும் உரிமையாலும் “யோகவெலோ” என்று DVG குறிப்பிட்டிருப்பதை யோகமடா என்பதாக மொழிபெயர்த்திருக்கிறேன்.]

Monday, April 30, 2012

பிறவிக்கடன் என்பது என்ன ?

பிறவிப்பிணி எதனால் வருகிறது? 

நமது தீர்க்கப்படாத ஆசைகள் என்பது பொதுவான எண்ணம்.
நாம் தீர்க்க வேண்டிய சில பழைய பாக்கிகளும் நமக்கு பிறவியைத் தரக்கூடியது என்ற நம்பிக்கையும் ந்ம்மிடையே உண்டு.

ஒரு சிலர் பத்து பைசா இருபது பைசா போன்ற மிகச் சிறியத் தொகையைக் கூடக் கறாராகக் கணக்குப் பார்த்து திருப்பித் தருவார்கள். “ என்னப்பா இதையெல்லாம் கணக்குப் பார்க்கணுமா?” என்றால் “ இதுக்காக இன்னொரு ஜன்மமெல்லாம் எடுத்து வந்து செட்டில் பண்ண முடியாது, கணக்குன்னா கணக்குதான்” என்கிற பதில்தான் கிடைக்கும்.

 சில வயதானவர்கள் எதிர்பார்ப்புக்கும் அதிகமான அளவு உதவி பெறும் போது “உன்னுடைய ருணத்தை எப்படித் தீர்ப்பேனோ” என்று சொல்வதைக் கேட்டிருக்கிறோம். (இ)ருணம் என்றால் கடன்.
அந்த உணர்வின் அடிப்படையில் எழுந்த ஒரு மக்குதிம்மன் பாடலின் பொருள் :

அன்னத்தை உட்கொள்ளும் போது கேட்டுக் கொள்; அதை வேக வைத்த நீர் |  உன் உழைப்பின் வியர்வையோ, பிறரது கண்ணீரோ  
தின்பாய் நீ, செகத்திற்கு தின்னக் கொடுத்ததை நிதமும். மிகுதியாகத் தின்றது  ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி - மக்குத்திம்மா

 தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான் என்கிற விதி நினைவூட்டப்படுகிறது. பிறரை ஏமாற்றி அல்லது உழைப்புக்குத் தகுந்த ஊதியம் தராது அவரது உழைப்பில் பயனடைந்தவர்கள் அதையும் ஒரு காலத்தில் தீர்க்க வேண்டிவரும் என்பதை “ ஜீரணிக்கமுடியாத கடன் பாக்கி “ என்று  DVG குறிப்பிடுவதாகக் கொள்ளலாம்.

உழைப்பின் முதற்பயன் உணவு பெறுதல். அதை ஒரு பொழுதும் கைவிட முடியாது.

எத்தட்டு மக்களாயினும் உணவு உண்ணுகையில் தான் உணவு ஈட்டிய வழியை நினைத்துக் கொள்வது ஆத்ம சோதனைக்கு  வழி வகுக்கும். அதுவே  அவரது ஆன்மீக முன்னேற்றத்திற்கான பாதை.

உலகில் தான தர்மங்கள் செய்யாமல் போக வாழ்க்கையை நடத்துவது  மிகுதியான உணவு உட்கொள்வதற்கு ஒப்பாகும். அதை செரித்துக் கொள்ள முடியாது.  அதை ”ஜீரணிக்க முடியாத மிச்சம் ” என்று  DVG உருவகப்படுத்துகிறார்.

உணவை வைத்து சொல்ல வந்த கருத்தில் பொருத்தமாக ஜீரணம் பற்றியும் சொல்லிவிட்டார்! அஜீரணம் உடலுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும். சமுதாயத்திற்கு தன்னால் முடியக் கூடிய கடமைகளையும் உதவிகளையும் செய்யாமல் விடுவதும் அஜீரணம். அது ஆன்மாவிற்கு கஷ்டத்தைக் கொடுக்கும்.

அந்தக் கஷ்டத்தை அனுபவித்துதான் கழிக்க வேண்டும் என்பதையும் பல சென்மங்களுக்குத் தொடரக்கூடியது என்பதையும் ’கடன் பாக்கி’ அல்லது ’பிறவிக்கடன்’ என்று உருவகப்படுத்துகிறார் DVG.

மொழியாக்க முயற்சி -1  
உன்னிடு உண்ணுகையில் உணவை, அது வெந்த நீரெது ? 
உன்னு  ழைப்பின் வியர்வையோ, வேறொருவர் கண்ணீரோ ?
உன்னுழைப் பளவேஉண்; செரிம மாகா மிகுதி 
இன்னல்தரும் பிறவிக் கடனாம் -மக்குத்திம்மா. 

 உன்னுழைப்பின் அளவே உண் என்பதை நியாயமான முறையில் சம்பாதித்ததை வைத்து அனுபவிப்பது என்ற பொருளில் எழுதினாலும், அதிர்ஷ்டம் உள்ள சிலருக்கு அவர்களின் எதிர்பார்ப்புக்கு மேலேயே பொருள் குவிகிறது.

பாடம் சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் உழைப்பு ஒன்றே ஆனாலும் அவர்கள் பணியாற்றும் பள்ளி அல்லது கல்லூரியின் வசதியைப் பொறுத்து அவர்களது வருமானம் பெருமளவில் வேறுபட வாய்ப்பிருக்கிறது. அதை தர்மத்திற்கு விரோதம் என்று சொல்ல முடியாது.

இதை வைத்துப் பார்க்கும் போதுதான்  DVG  ”தின்பாய் நீ, செகத்திற்குத் தின்னக் கொடுத்ததை..” என்று சொன்னதன் ஆழம் புரிந்தது. அப்படிப்பட்ட அதிர்ஷ்டமுள்ளவர்கள் பெரிய அளவில் தம் செல்வத்தை சமுதாய மேம்பாட்டுக்காக கொடுக்க வேண்டும்.
அளவுக்கு அதிகமான செல்வம், 'படகுக்குள் புகுந்த நீரைப் போல' என்று கபீர் சொல்வார். அப்போது தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இரண்டு கைகளாலும் நீரை வெளியே இறைப்பது போல நமக்கு இறையருளால்  வந்த செல்வத்தை பிறர் நலனுக்காக கொடுத்து விடுங்கள் என்கிறார்.  ஆச்சார்யா P.C. Ray இன் வாழ்க்கையை   இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.

முயற்சி -2  
பசிகளையும் கவளம் வெந்தது உன் வியர்வையிலோ 
புசிக்கும் வேளை நினை, அது பிறன்தன் கண்ணீரோ 
இசைவதும் நீ கொடுத்த அளவே ; தின்ற மிகுதியோ 
இசித்திடும் சமியாக் கடனே -மக்குத் திம்மா 


[இசைதல்-ஏற்புடையது; இசித்தல் - இழுத்தல் சுண்டுதல்; சமி -சீரணம் ] 

மனிதனாக வாழக் கற்றுக் கொண்டால் தெய்வம் தானே தேடிவரும். மனிதனாக வாழ்வதற்கு வழிகாட்டும் பாடல் இது.

Sunday, April 1, 2012

Gmail Tap -எடுபடுமா ?

கைப்பேசி யுகம் வந்ததிலிருந்து கடிதம் எழுதுவது என்பதே மறந்து போய்விட்டது. பெரும்பாலனவர்களின் வசிக்கும் இடம் தெரியும் ஆனால் விலாசம் தெரியாது. விசேஷத்திற்கு நேராக சென்று அழைக்க முடியாமல் போகும் போது மட்டும் “.....கண்டிப்பா எல்லாரும் வந்துடுங்க. இன்விடேஷனை தபால்-ல போடறேன். கொஞ்சம் அட்ரஸ் சொல்றியா ?” என்று அன்பாகக் கேட்டு அழைப்பிதழை அனுப்பிய கையோடு விலாசத்தை மறந்து விடுவது வழக்கமாகி விட்டது. அதுதான் செல்போன் இருக்கே. எப்போது வேண்டுமானாலும் கேட்டுக் கொள்ளலாம் :))

பள்ளிக்கூடத்தில் படிக்கும் பொழுது தந்தி வழி செய்தி அனுப்பும் முறைக்கு அடிப்படை மோர்ஸ் கோடு ( Morse code)என்று படித்திருக்கிறோம். மின்னஞ்சல், FAX என்கிற முறைகள் வந்ததும் இந்த தந்தி அனுப்பும் தொழிலும் படுத்து விட்டது. இந்திய தபால்துறை பெரும்பாலான இடங்களில் தந்தி அலுவலகங்களுக்கு மூடுவிழா நடத்தி வருகின்றனர். கப்பல் வழி வணிகத்திற்கும் உலகப்போரின் போதும் உயிர் நாடியாக விளங்கிய மோர்ஸ்-குறிமுறை இனி வரலாற்றில் படிக்க வேண்டிய ஒன்று என்று நினைத்தால் அது தவறாகும்.

கூகுள் இப்போது அதற்கு மீண்டும் உயிர் கொடுக்க முனைந்திருக்கிறது. அவர்களது நோக்கம், கைப்பேசியில் இருக்கும் ஆங்கில எழுத்துகளுக்கான பொத்தான்களைத் தேடித் தேடி இயக்குவதற்கு பதிலாக dot & dash முறையில் இரண்டு பொத்தான்களின் துணையோடு space bar யும் பயன்படுத்தி வேகமாக தட்டச்சு செய்யமுடியும் என்கிறது.



இதற்கான மென்பொருளை ஆண்ட்ராய்ட் பயன்படுத்தும் கைபேசிகளில் தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறது கூகிள்.
ஆனால் அந்த மோர்ஸ்-குறிமுறை யைப் பார்க்கும் போது உண்மையிலேயே அவர்கள் குறிப்பிடுவது போல் சுலபமாக இருக்க முடியுமா என்கிற சந்தேகமே அதிகமாகிறது. படத்தைப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது. DAD என்கிற மூன்றெழுத்துக்கு எட்டு முறை பொத்தானை அழுத்த வேண்டும் !! பின் வேகம் எப்படிக் கூடும் ?

எலக்டரானிக் டிஜிடல் கடியாரங்கள் வந்த புதிதில் நகரும் முட்கடியாரங்கள் செத்து ஒழிந்து விடும் என்று நம்பியவர்களில் நானும் ஒருவன். ஆனால் அந்த முட்கள் இல்லாமல் காலமே நகராது என்று நம்பும் அளவுக்கு அவை இன்னும் நிலைத்து நிற்கின்றன. சாவி கொடுக்கும் தொந்திரவு,பாட்டரி இயக்கத்தால் ஒழிக்கப்பட்டதலோ என்னவோ பொதுவாக இக்காலத்து முட்கடியாரங்கள் மிகவும் தரமானவைகளாக இருப்பதாலும், வெகுநாட்கள் பழுது இல்லாமல் செயல்படுவதாலும் இருக்கலாம். ஆனால் எளிமையாக எண்களைப் பார்த்தே நேரம் அறிந்து கொள்ள வசதி வந்தும் ஏன் முட்கடியாரங்களை துறக்க மனிதர்களுக்கு மனம் வரவில்லை ?

புதிதாக ஒன்றைக் கற்றுக் கொண்டு செயல்படுத்த வேண்டுமென்றால் கற்றுக் கொள்வதற்கான நேரம், எளிமை இரண்டும் மிகவும் பொருந்தி வரவேண்டும். மோர்ஸ்-குறிமுறை இந்த இரண்டு விஷயத்திலும் நம்பிக்கை அளிப்பதாக இல்லை.
எனவே எத்தனை நுகர்வோர்கள் மோர்ஸ் முறைக்கு மாறுவார்கள் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.